புதுக்கோட்டை: மது அருந்த பணம் கேட்டு தராத நண்பனை சாதி பெயரை கூறி திட்டி, கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரவியிடம், சுந்தரம் என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். நண்பன் சுந்தரத்துக்கு பணம் கொடுக்க மறுத்த ரவி, ஏன் வேலைக்கு செல்லவில்லை என்று கூறி அவரை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம், ரவியை அவரது சாதி பெயரை கூறி திட்டியதுடன் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம், மது அருந்த பணம் கேட்டு தராத நண்பனை சாதி பெயரை கூறி திட்டி, கொலை செய்த சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், வழக்கில் குற்றவாளி சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சத்யா உத்தரவிட்டார். குற்றவாளி செலுத்தக்கூடிய அபராதத் தொகையை உயிரிழந்த ரவியின் குடும்பத்துக்கு நிவாரணமாக வழங்க நீதிபதி ஆணையிட்டார்.