Wednesday, May 1, 2024
Home » கோடைக்காலம் தொடங்கியதால் பயன்பாடு அதிகரிக்கும் திரவ உணவு விற்பவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

கோடைக்காலம் தொடங்கியதால் பயன்பாடு அதிகரிக்கும் திரவ உணவு விற்பவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

by Arun Kumar
Published: Last Updated on

வேலூர்: கோடைகாலத்தில் திரவ உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கோடைக்காலம் தொடங்கி உள்ளதால், வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 2 நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதேபோல் திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெயிலை மக்கள் சமாளிக்க சாலையோரம் புதிது புதிதாக குளிர்பான கடைகள் முளைத்துள்ளது. இந்த கடைகளில் திரவ ஆகாரங்கள் விற்பனை செய்யப்படுவதில் உணவு பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடைக்காலம் தற்போது தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் இளநீர், கம்பங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர், உள்ளிட்ட திரவ ஆகாரங்களை அதிகளவு உட்கொள்வார்கள். இந்த தேவைகளை பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கோடைக்கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதன்படி அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் அல்லது பதிவு சான்றிதழை ‘https://foscos.fssai.gov.in’ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழை பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும். பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களை தயாரிக்க பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும். தண்ணீரை தனியார் பகுப்பாய்வு கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும்.

திரவ ஆகாரங்களை திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. குளிரூட்டப்பட்ட உணவு தர ஐஸ் கட்டியை பயன்படுத்த வேண்டும். உணவு தர ஐஸ்கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவு தரம் இல்லாத ஐஸ் கட்டிகள் நீல நிறத்திலும் இருக்கும். ஐஸ் பெட்டிகளை கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும்.

ஐஸ் கட்டிகளை வைக்கோல், சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருக்கக்கூடாது. குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டியை பயன்படுத்த வேண்டும். அதேபோன்று நுகர்வோர் கடையில் திரவ உணவு பொருட்களை வாங்கும் போது கடையில் உணவு பாதுகாப்பு உரிமை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கெட்டு போகும் நிலையில் பொருட்கள் இருந்தால் அதனை தவிர்க்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும். நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிகளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆதாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாக்கெட்டில் உள்ள திரவ ஆகாரங்களின் தயாரிப்பு தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடு அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடு இருந்தால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

six − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi