தொழில் மற்றும் வேலைநிமித்தமாக நம் தமிழ் உறவுகள் அமெரிக்கா தொடங்கி வளைகுடா நாடுகள் வரை பல்வேறு அயல்நாடுகளில் வசிக்கின்றனர். விஞ்ஞான உலகின் வளர்ச்சிக்கேற்ப பல மாணவர்கள் உயர்கல்வி பயிலவும், நிபுணத்துவம் பெறவும் வெளிநாடுகள் செல்கின்றனர். நம் தொப்புள் கொடி உறவுகளான அவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை நம்மவர்களாக கருதி, அவர்களை பாதுகாப்பதும், அவர்கள் குடும்பத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதும் நல்லதொரு அரசின் கடமையாகும்.
தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இந்த திராவிட மாடல் ஆட்சியில், அயல்நாட்டு தமிழ் உறவுகள் மகிழ்வுற வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் நலனுக்காக 2011ம் ஆண்டிலே அப்போதைய முதல்வர் கலைஞர், ‘தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச்சட்டம்’ என்ற ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றினார். அச்சட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களும் உருவாக்கப்பட்டன.
அதிலும் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிகமான நபர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே அவர்களது நலனுக்காக திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அதிகம். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் ‘அயலகத் தமிழர் நலவாரியம்’ என்ற அமைப்பை உருவாக்கி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார்.
வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காக்க இந்த வாரியம் அமைக்கப்பட்டது. 18 வயது முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில் ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி வாரியத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம். மேலும் வாரியத்தின் அடையாள அட்டையினை பெற்று, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதை புதுப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
வாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் பல்ேவறு பயன்களை தற்போது பெற்று வருகின்றனர். கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் அடைந்த பயன்கள் ஏராளம். 10ம் வகுப்பு தொடங்கி, மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி என அவர்களது குழந்தைகளின் படிப்புக்கேற்ப கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
வாரியத்தில் உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில், அவரது மகன், மகளுக்கு திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம், தமிழ்மொழியை இணைய வழியில் கற்பிக்க நடவடிக்கை என அயலகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு திராவிட மாடல் அரசு செய்யும் நற்தொண்டுகளை கூறிக் கொண்டே செல்லலாம்.
இதையெல்லாம் விட திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன்களை ேபணிட தனி அமைப்பே உருவாக்கப்பட்டது.
வௌிநாடு வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களது உரிமைகளை காக்கவும் திமுகவில் ‘வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி’ என ஒரு தனி அணியே உருவாக்கப்பட்டது. புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று வெளிநாடுகளில் நிம்மதியாக தொழில் செய்யவும், தமிழ்நாட்டில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பையும் நல்குவதாக அரசின் நலத்திட்டங்கள் காணப்படுகின்றன. யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்பதற்கேற்ப, அயலக மண்ணில் வசிக்கும் நம் சொந்தங்களுக்கு அரசின் வழியில் நாமும் கை கொடுப்போம்.