Sunday, May 12, 2024
Home » திமுக கூட்டணிக்கு போகலாம் என்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சொன்னார்கள்: அதிமுக, பாஜவுடன் எந்த மறைமுக பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

திமுக கூட்டணிக்கு போகலாம் என்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சொன்னார்கள்: அதிமுக, பாஜவுடன் எந்த மறைமுக பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

by Dhanush Kumar

* துணை செயலாளர் பார்த்தசாரதி பேட்டி

சென்னை: திமுக கூட்டணிக்கு போகலாம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சொன்னார்கள். அதிமுக, பாஜவுடன் எந்த மறைமுக பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று துணை செயலாளர் பார்த்த சாரதி கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. அது போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோற்றது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. 2021 சட்டசபை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 0.43% வாக்குகளைத்தான் பெற்றது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று திடீரென அறிவித்தது. இதை எந்த கட்சிகளும் ஏற்க முன்வரவில்லை. இதனால், தேமுதிக பல்டி அடித்தது. 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி என்பது தொண்டர்களின் விருப்பம் என பிரேமலதா அறிவித்தார். தொடர்ந்து பாஜ அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதில் பிரேமலதா பிடிவாதமாக இருந்து வந்தார். இதை 2 கட்சிகளும் ஏற்காததால் தேமுதிக கடும் அதிர்ச்சியடைந்தது.

நேற்று முன்தினம் இரவு திடீரென அதிமுக தரப்பில் இருந்து பிரேமலதாவிடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. தேமுதிக தரப்பில் 10 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்க வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்போது மாநிலங்களவை பதவி தர மாட்டோம். 4 அல்லது 5 மக்களவை தொகுதி தருகிறோம். இதற்கு சம்மதித்தால் கூட்டணியை ஏற்றுக்கொள்கிறோம் என்று அதிமுக தரப்பில் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி அளித்த பேட்டி:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜவுடன் எந்தவிதமான மறைமுக பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இது தான் உண்மை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் திமுக கூட்டணிக்கும் போகலாம் என்று சொன்னார்கள். திமுகவில் பல கட்சி கூட்டணி இருக்கிறது. வாய்ப்பு இருந்தால் திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் எந்த கட்சியிலும் போவோம். 14 இடங்கள் வேண்டும் என்பது மாவட்ட செயலாளர்களின் கருத்து. அதை தான் பொது செயலாளர் பிரேமலதா சொன்னார். கூட்டணி தர்மம் என்று வரும் போது, பேச்சுவார்த்தையில் என்ன முடிவாகிறதோ, அந்த முடிவை ஏற்போம். எவ்வளவு சீட் வேண்டும் என்று எந்த டிமாண்டும் இல்லை. எல்லாம் தேமுதிக பொது செயலாளரின் டிமாண்ட் தான் என்றார்.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi