சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி பதில் விவரங்களை தொடுதிரை கணினியில் பார்த்திடும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜிட்டல் ஹவுஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகித பயன்பாட்டை முற்றிலும் நீக்கும் விதமாக அவை நடவடிக்கைகள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் ஹவுஸ் என்ற திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவர படுவதாக பேரவையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்கள் தங்கள் மேஜை மேலுள்ள சிறு கணினியில் அவை நடவடிக்கைகளை காணும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக இ-புக் என்ற செயலி உருவாக்கப்பட்டு இன்று முதல் பயன் பாட்டிற்கு வந்துள்ளதாகவும் கூறினார். முதல் கட்டமாக கேள்வி நேரத்தில் உரையாற்றும் பெயர் புகைப்படம் நேரம் உள்ளிட்டவை ஹவுஸ் கண்ட்ரோலர் போர்டு மற்றும் டிஸ்பிலே யூனிட் மூலம் பேரவை மண்டபத்திலுள்ள தொடுதிரை கணினி மற்றும் பெரிய திரைகளில் காண வசதி செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பாவு தெரிவித்தார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இ-புக் செயலி பயன்படுத்த உறுப்பினர்கள் தங்களுக்கான பயனாளர் குறியீடு மற்றும் கடவு சொல்லை பயன்படுத்த வேண்டும் என்றும் இதனை ஏற்கனவே உருவாக்கி சிறு கணினியில் உள்ளீடு செய்துள்ளதாகவும் சபாநாயகர் கூறினார்.