புதுடெல்லி: டெல்லி சாகெத் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயம் அடைந்தார். அவரை சுட்ட வக்கீலை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள சாகெத் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றியவர் காமேஷ்வர் சிங். இவர் ராதா (40) என்ற பெண்ணுக்கு ரூ.25 லட்சம் கடன் கொடுத்ததாகவும், அந்த பெண் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சாகேத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் காமேஷ்வர், ராதா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வக்கீல் காமேஷ்வர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ராதாவை சரமாரியாக சுட்டார். இதில், ராதாவின் வயிற்றிலும், கையிலும் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் பதுங்கிய காமேஷ்வரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். இவர் பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.