Wednesday, May 15, 2024
Home » நேற்றிரவு முதல் கனமழை பெய்வதால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது: உபரிநீர் திறக்க இன்று முடிவு?

நேற்றிரவு முதல் கனமழை பெய்வதால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது: உபரிநீர் திறக்க இன்று முடிவு?

by MuthuKumar

குன்றத்துார்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று முதல்கட்டமாக 25 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயரம் 22.5 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 3132 மில்லியன் கன அடியாகவும் நீர்வரத்து மணிக்கு 497 கன அடியாகவும் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்துஅதிகரித்து வருவதால் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் ஏற்கனவே உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பியதாலும் இன்று முதல் ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதனால் ஏரிக்கு வரும் மழைநீரை, உபரிநீராக அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் முதல்கட்டமாக 100 கன அடியும் பின்னர் அது படிப்படியாக உயர்ந்து 12,000 கன அடிவரை திறக்கப்பட்டது. கடந்த இரண்டரை மாதங்களாக தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், மழை நின்றதால் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தான் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi