Friday, May 17, 2024
Home » ரூ.பல லட்சம் பெற்றுக்கொண்டு ஒப்பந்த பணி தூத்துக்குடி கலெக்டர் ஆபீசை ஆசிரியர்கள் திடீர் முற்றுகை

ரூ.பல லட்சம் பெற்றுக்கொண்டு ஒப்பந்த பணி தூத்துக்குடி கலெக்டர் ஆபீசை ஆசிரியர்கள் திடீர் முற்றுகை

by Lakshmipathi

*7 மாதமாக சம்பளம் தராத தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி : கடந்த 7 மாத காலமாக சம்பளம் பெற்றுத் தராத ஆறுமுகநேரி தொண்டு நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பளத்தை உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியைகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தற்காலிக ஆசிரியைகள் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஆசிரியைகள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆறுமுகநேரி பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவனம், எங்களிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியர்களாக பணி நியமனம் செய்தனர். இதற்கான மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் தருவதாகவும் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நாங்களும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்தோம்.

இந்த நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி எங்களைப்போன்று ஏராளமானவர்களும் ஆசிரியர் வேலைக்காக இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக எங்களுக்கு இந்த நிறுவனம் மூலமாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நாங்கள் தொண்டு நிறுவன அலுவலகத்தை பலமுறை தொடர்பு கொண்டபோது எங்களுக்கு சரியான பதில் அளிக்கவில்லை. அதோடு எங்களுக்கான சம்பளத்தையும் இதுவரை அந்த தொண்டு நிறுவனம் தரவில்லை.

அரசு பள்ளியில் நாங்கள் கடந்த 7 மாதங்கள் முறையாக பணியாற்றி உள்ளோம். சம்பளம் கிடைக்காமல் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, எங்களுக்கான சம்பளத்தை உடனடியாக பெற்றுத்தர வேண்டும். வேலைக்காக எங்களிடம் இருந்து அந்த நிறுவனம் பெற்றுள்ள பணத்தையும் பெற்றுத் தந்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

இதேபோல் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திலும் இதேபோன்ற முறைகேடு நடைபெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியைகளும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

fifteen + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi