ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே உள்ள லச்சிவாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீசெங்காளம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அகற்றிவிட்டு அருகிலேயே புதிதாக கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் 8ம் தேதி காலை விநாயகர் பூஜை, மங்கள இசை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், நெய்வேத்தியம் ஆகியவையும் 2வது நாள் 9ம் தேதி விநாயகர் பூஜை கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் புதிய பிம்பங்கள் கிராமத்தில் கரிகோலம் வருதல், முதல்கால யாகசாலை பூஜை, நெய்வேத்தியம் பிம்ப பிரதிஷ்டை செய்யப்பட்டது.
3ம் நாள் நேற்று விநாயகர்பூஜை, அங்குரார்ப்பணம், 2ம் காலயாகசாலை பூஜை, ஹோமம், அஷ்டபந்தனம் சாற்றுதல் மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும் நாடி சந்தானம், தத்வார்ச்சனை, நெய்த்தியம் நடந்தது. இன்று காலை யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கோயில் கோபுர கலசத்திலும் மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீசெங்காளம்மனுக்கும் புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதன் பின்னர் மகாதீபாராதனையும் 1000 பேருக்கு அன்தானமும் வழங்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு செங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.