வாலாஜாபாத்: ஏக்கனாம்பேட்டை பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, லாரி மோதியதில் கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார். இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. வாலாஜாபாத் ஒன்றியம், திம்மையன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வன்னியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி (45). கூலித்தொழிலாளியான இவர், நேற்று மாலை காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலை ஏகனாம்பேட்டை பகுதி சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து, எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வாலாஜாபாத் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ரவி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக காஞ்சிபுரம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், ரவி லாரி மோதி உயிரிழந்ததை அறிந்த உறவினர்கள், ஏகனாம்பேட்டை சாலையில் அமர்ந்து சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், உறவினர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.