சென்னை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கிற மாணவ, மாணவியரின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் வகையில் அடல்டிங்கரின் ஆய்வகம், உயர் தொழில்நுட்ப ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், மொழி ஆய்வகம், தொழில் கல்வி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வகப் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆய்வகப் பணிகள் குறித்து தேவையான பயிற்சிகளை அளிக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட வேண்டும். மேலும் மேற்கண்ட பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் உதவியாளர்கள் ஆய்வக பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தும் வகையில் ஆய்வகப் பணிகளை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.