*உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை
தென்காசி : குற்றாலம் அருகே வல்லத்தில் கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
தமிழகம் முழுவதும் தற்போது மாம்பழ சீசன் துவங்கி விற்பனை நடைபெற்று வருகிறது. வணிக நோக்கம் காரணமாக இயற்கையாக பழுக்க வைப்பதற்கு பதிலாக கெமிக்கல் வைத்து பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இது போன்ற மாம்பழங்களை உண்பதால் உடலுக்கு கேடுகளை விளைவிக்கிறது. இந்நிலையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாக சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் குற்றாலத்தை அடுத்த வல்லம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார். மொத்தம் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கெமிக்கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.