திருவள்ளூர்: குஷ்பு நாவடக்கத்துடன் பேச வேண்டும் என தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம், புகார் மனு கொடுத்துள்ளார். பாஜ மாநில மகளிர் அணி நிர்வாகியும், பிரபல திரைப்பட நடிகையுமான குஷ்பு, மன்சூர்அலிகான் விவகாரத்தில், சேரி மக்கள் என்றும், சேரி மொழி என்றும் கூறி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வெடித்துள்ளது. இதில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் கி.வீரலட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகி ஜான்சாமுவேல் உள்பட பலர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாணிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில், தமிழ் மக்களை இழிவாகப் பேசிய குஷ்பு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும் மும்பையிலிருந்து பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்துவிட்டு, தமிழ் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொள்ளலாம் என்றும், விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்றும் பேசியதற்கு ஏற்கனவே அவருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே, இனிமேலாவது நாவடக்கத்துடன் குஷ்பு பேச வேண்டும். இல்லையேல், போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.