சென்னை: தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள கைவினைஞர்களை ஊக்குவித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனையினை குறளகம் கட்டிடத்தில் உள்ள கதரங்காடி தரைதளத்தில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் கொலு பொம்மை விற்பனை கடந்த 14ம் தேதி முதல் 31.10.2023 வரை 48 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைஞர்கள், மண்பாண்ட கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், அரசு மனநல காப்பகத்தில் உள்ள உள்நோயாளிகளால் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள், பூம்புகார் நிறுவனத்தினரின் கைவினை பொருட்கள், பனை வாரிய பொருட்கள் மற்றும் வண்ணமிகு நிறங்களில் காண்போரை கவரும் வண்ணம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தெய்வீக சிற்பங்கள், டெரகோட்டா வகை பொம்மைகள், மண்பொம்மைகள், மரபொம்மைகள், பீங்கான் பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், கற்சிற்பங்கள் மற்றும் மார்பிள் சிற்பங்கள் போன்ற பல விதவிதமான பொம்மைகள் 28 விற்பனை அரங்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிலிருந்து தயார் செய்யப்பட்ட பல்வேறு விதமான பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளதாக தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.