கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை 1008 பரத கலைஞர்கள் பங்கேற்ற மகா பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா வரும் பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேகவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் தொடங்கி இன்று முதற்கால யாக பூஜைகளுடன் தொடங்கி எட்டு கால யாக பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தருமபுரம் ஆதீன கலை மையம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1008 பரதக்கலைஞர்கள் பங்கேற்ற மகா பரதநாட்டிய நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனம் 27வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.