கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து பொது குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை தங்களின் வீட்டிற்குள் நேரடியாக எடுத்து செல்லும் வகையில் ஹோஸ் பைப் மற்றும் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேரடியாக பொது குழாயில் வரும் குடிநீரை குடங்களை கொண்டு பிடித்து உபயோகிக்க வேண்டும். இதில், ஹோஸ் பைப் மற்றும் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும்.இதனை மீறி பயன்படுத்தினால் நகராட்சி பணியாளர்கள் மூலம் ஹோஸ் மற்றும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நகராட்சி விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.மேலும், இது குறித்த துண்டு பிரசுரங்களை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டு வருகிறது.