செஞ்சி: செஞ்சி அருகே கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து கிரிவலம் சென்று வந்த அண்ணன், தம்பியான 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (35). இவர் தனது சொந்த ஆட்டோவில் மனைவி சத்யா, மகன்கள் பிரதீஷ்வரன் (10), ஹரிபிரசாந்த் (7) மற்றும் உறவினர்கள் ருத்ரகுமார், பாஞ்சாலி, அம்முச்சி, ஆகாஷ், பொன்னி ஆகியோருடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு சென்றார். பின்னர் செஞ்சி அடுத்த புலிவந்தி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு நள்ளிரவு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊரான கப்பை கிராமத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கப்பை கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரது தரை கிணற்றில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது.
ஆட்டோவில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த ஆட்டோவையும், அதில் வந்தவர்களையும் மீட்டனர். நீரில் மூழ்கி, பிரதீஷ்வரன், ஹரிபிரசாந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். மேலும் காயம் அடைந்த யுவராஜ், சத்யா, ருத்ரகுமார், பாஞ்சாலி, அம்முச்சி, ஆகாஷ், பொன்னி ஆகிய 7 பேரும் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.