சூளகிரி: சூளகிரி அருகே 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா மகன் கார்த்திக் (23). வேன் டிரைவரான இவருக்கும், உத்தனப்பள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது. இந்நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை ஒரு வருடத்திற்கு முன்பு கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, சமீபத்தில் விவசாய வேலைக்கு செல்லும் பெண்ணை கோயிலில் தாலி கட்டி 3வதாக திருமணம் செய்து கொண்டார். பல நாட்களாக 3 பேருடனும் மாறி மாறி குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், கார்த்திக்கின் லீலை குறித்து அறிந்த 3 பெண்களும் திடுக்கிட்டனர். பாதிக்கபட்ட 3 பேரும் தங்களது பெற்றோருடன் உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில், எஸ்ஐ குமுதா வழக்குப்பதிந்து விசாரித்து நேற்று கார்த்திக்கை கைது செய்தார். பின்னர், அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் போலீசார் அடைத்தனர்.