கோத்தகிரி: கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானை கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் முள்ளூர் பகுதியில் நேற்றிரவு காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வந்து வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில், உலா வந்த காட்டு யானைகள் எவ்வித அச்சமும் இல்லாமல் வாகனங்களை நோக்கி வந்து சாலையில் நின்று கொண்டிருந்தன. கூட்டத்தில் இருந்த வந்த ஒரு யானை வாகன ஓட்டிகளை துரத்தும் விதமாக வந்துள்ளது. இந்த காட்சியை அவ்வழியாக பயணித்த வாகனத்தில் வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.எனவே சாலையில் உலாவரும் காட்டு யானைகள் கூட்டம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை தாக்கும் முன் வனத்துறையினர் இரவுநேர வாகன ரோந்து மேற்கொண்டு சாலையில் உலா வரும் காட்டு யானை கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.