சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பேட்டி அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசுவதற்கு கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்ய நீதிபதி ஆணையிட்டார்.
இதனை அடுத்து நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்றும் வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் உயர்நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் கார்த்திகை பாலன் இன்று அவரிடமிருந்து சாட்சியத்தை பதிவு செய்தார். சாட்சியத்தை பதிவு செய்தது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் கார்த்திகை பாலன் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.