திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு கட்டண உயர்வு, கட்டுப்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்வையிட புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சதுக்கம், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு பணிக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சுற்றுலா வரும் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ், மாசு சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிஜம் ஏரிக்கு நாள் ஒன்றிற்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் பராமரிப்பு காரணங்களுக்காக ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் திருத்தப்பட்ட டிக்கெட் கட்டணத்தை வனத்துறை வெளியிட்டது. அதன்படி சுற்றுலாப் பயணிகளுடன் வரும் உள்நாட்டு பேருந்துகளுக்கு ரூ.100, கார், வேன்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் வனப்பகுதியிலுள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட விரும்பும் 12 வயதிற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியிடம் தலா ரூ.30 கட்டணம், 5-12 வயதிற்கு கீழான சிறுவர்களுக்கு தலா ரூ.20 என்றும் அதற்கு கீழான வயதுடையவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாட்டவர் ஒருவர் ரூ.300 நுழைவு கட்டணமாக செலுத்தி சுற்றுலாத்தளங்களை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு 15 நாட்களுக்கு மட்டும் பழைய கட்டண முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கட்டண உயர்வு, புதிய கட்டுப்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு வாகன பதிவு சான்று, ஓட்டுனர் உரிமம், மாசு இல்லா சான்று, காப்பீடு கட்டாயமாக்கப்பட்டது. இன்று வந்த பல வாகன ஓட்டுனர்களிடம் அசல் ஆவணங்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு கட்டண உயர்வு, கட்டுப்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.