கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலமாகும். இந்த 2 மாதங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகள் விரும்பி ரசிக்கும் இடங்களில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா முக்கியமான ஒன்றாக உள்ளது. இங்கு கோடை சீசனில் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக இப்பூங்காவில் பல லட்சம் மலர் நாற்றுக்கள் பல்வேறு கட்டங்களாக நடப்பட்டு ஏப்ரல், மே மாதங்களில் பூப்பதற்கு தயாராக உள்ளன.
இப்பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை மேலும் கவர்வதற்காக பல்வேறு உருவ அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மலர்களால் ஆன நுழைவாயில், செடிகளால் ஆன உருவ அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உருவ அமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் ரசிப்பதற்கு ஏதுவாக இன்னும் சில நாட்களில் ஏற்படுத்தப்படும் என பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.