கொடைக்கானல்: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஒருவர் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கியதில் இருந்து பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் பரிதவித்து வருகின்றனர். தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்ட காரணத்தால் அனைவரும் கூட்டம் கூட்டமாக மலைப் பகுதிகள் மற்றும் நீர்நிலை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.
கொடைக்கானல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மதுரை-ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு கொடைக்கானல் வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த பின்னர் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி பழனி மலைச்சாலை வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. 5-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த மன்னார்குடியைச் சேர்ந்த முகேஸ்வரன் (15), திவ்யா (29), தன்சிகா (4), கவுரி (18), காயத்ரி (21), பாரதி செல்வன் (15), ஓட்டுநர் இளம்பரிதி (25) உட்பட 21 பேர் பலத்த காயமடைந்தனர்.
வாகனம் விபத்துக்குள்ளானதை அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி 21 பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் தஞ்சாவூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பழனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.