கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று பெய்த தொடர் மழையால் விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலாப்பயணிகள் தவித்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. ஆனால் சுற்றுலா தலங்களை ஆனந்தமாக கண்டு ரசிக்க முடியாத வகையில் காலை முதல் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் கடும் அவதிக்குள்ளாயினர்.
இதற்கிடையே கொடைக்கானலில் தொடர்ந்து 2 தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ெகாடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கேஆர்ஆர் கலையரங்கம் பகுதியில் சுற்றுலா வாகன நிறுத்துமிடம் அருகே ஒரு மரம் சாய்ந்தது. அப்போது வாகனங்கள் ஏதும் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கொடைக்கானல் வந்த சுற்றுலாப்பயணிகள் தொடர் மழையால் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாமல் வாகனங்கள் மற்றும் விடுதிகளில் காத்திருக்கும் நிலை உருவானது. இதற்கிடையே சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் இருந்தது.
சுதந்திர தின விழா வரை கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாக உள்ளன. சுற்றுலாப்பயணிகளின் வருகையும் இந்த விடுமுறை காலத்தில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் போதிய எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.