*6 பேர் உயிர் தப்பினர்
கொடைக்கானல் : கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு நேற்று ஒரு காரில் 6 பேர் சுற்றுலா வந்தனர். பழநி மலைச்சாலையில் கோம்பைக்காடு அருகே வந்தபோது திடீரென காரின் முன்புறம் தீப்பற்றியது. உடனே காரை சாலையிலே நிறுத்தி உள்ளே இருந்த 6 பேரும் அவசரமாக கீழே இறங்கி வெளியேறினர்.
அடுத்த சில நொடிகளில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் கார் முழுவதும் எரிந்து போனது. காரை விட்டு உடனே இறங்கியதால் 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜின் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.