கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடும் பனியால் மலர் நாற்றுகள் மற்றும் மலர் செடிகள் கருகுவதை தடுக்க பசுமை போர்வை போர்த்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ெகாடைக்கானல் நகர் மத்தியில் பிரையண்ட் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சீசன் காலத்தில், பூக்கும் வகையில் பல லட்சம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை முடிவடைய உள்ள நிலையில், பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் இங்குள்ள மலர் நாற்றுகள் மற்றும் மலர்ச்செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்குள்ள மலர் நாற்றுகள் மற்றும் மலர்ச்செடிகளை பாதுகாக்கும் வகையில் பசுமை போர்வை தயாரிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தினமும் மாலை வேளையில் மலர் நாற்றுகளை பசுமை போர்வையால் மூடும் பணி நடந்து வருகிறது. மறுநாள் காலை இந்த பசுமை போர்வை அகற்றப்படும். பனி சீசன் காலத்தில் மட்டும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.