* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
* சூப், கிரேவி போன்றவற்றில் சேர்ப்பதற்கு கிரீம் கைவசம் இல்லையென்றால் வெண்ணெய்யில் சிறிது பாலை நன்கு கலந்து கிரீமுக்குப் பதிலாக உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட் அல்லது துருவிய சிவப்புப் பூசணிக்காய் பயன்படுத்தலாம்.
* பால் அல்வா செய்யும்போது சிறிது கோக்கோ பவுடர் சேர்த்தால் சுவையான சாக்லேட் பால் அல்வா தயார்.– கவிதா சரவணன்.
* கறிவேப்பிலையை ஈரம் இல்லாமல் துடைத்து, ஹாட் பாக்ஸில் போட்டு மூடி வைத்தால் ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே நாலைந்து நாட்கள் பசுமையாக இருக்கும்.
* சிறிதளவு உளுந்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* எட்டுபங்கு அரிசிக்கு, ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து அரைத்து உப்பு மற்றும் புளித்த மோரைக் கலந்து தோசை வார்த்தால் சுவையான தோசை கிடைக்கும்.
* ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் கலந்து தாளித்து கொட்டிவிட்டால் வித்தியாசமான சுவையில் ஊறுகாய் தயார்.
* சமையல் செய்யும் மேடையில் எண்ணெய்க்கறை படிந்திருந்தால், அந்த இடத்தில் சிறிதளவு கடலை மாவைத் தண்ணீரில் கரைத்து ஊற்றி, தண்ணீர் விட்டுக் கழுவிவிட்டால் இடம் சுத்தமாக ஆகிவிடும்.
* சமையலறையில் எலித்தொல்லை இருந்தால் புதினா இலையை ஆங்காங்கே போட்டு வைத்தால் போதும் தொல்லை இருக்காது.
* கேக் செய்யும்போது, மாவுக் கலவையுடன் சிறிதளவு தேன் சேர்த்துக் கொண்டால் சுவையான, மிருதுவான கேக் தயார்.
* கோதுமை மாவை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து ஆறியதும் உப்பு சேர்த்துப் பிசைந்து முறுக்கு பிழியும் அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து ஆவியில் வேகவைத்தால் கோதுமை சேவை தயார்.
* ஃப்ரிட்ஜில் வைக்கும் சப்பாத்திமாவு கறுத்துப் போகாமல் இருக்க, மாவைப் பிசைந்து, பிளாஸ்டிக் டப்பாவில் வைக்க வேண்டும்.- அ.திவ்யா.