* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, நன்கு கனிந்த பலாச்சுளைகளை பாலில் அரைத்துச் சேர்த்து செய்தால் பொங்கலின் ருசியே அலாதிதான்.
* குழம்பில் உப்பு அதிகமானால், சிறிது அரிசியை வறுத்து நைஸாக அரைத்துக் குழம்பில் கலந்தால் உப்பு குறைந்துவிடும்.
* இரண்டு தேக்கரண்டி புழுங்கல் அரிசியுடன் சிறிது தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்து தயிரில் கலந்து கடுகு தாளித்துக் கொட்டினால் வித்தியாசமான சுவையுடன் தயிர் பச்சடிதயார்.
* முருங்கைப் பூவை தேங்காய் எண்ணெய்யில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் மிகவும் வாசனையாக இருக்கும்.
* வடகம் செய்பவர்கள் ஐந்து பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து மாவரைத்து வடகம் பிழிந்தால் வடகம் நல்ல மொறுமொறுப்பாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.
* கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவை சேர்த்துவிட்டால் சீக்கிரம் ஊசிப் போகாது, கெட்டியாகவும் இருக்கும்.
* சேமியா, நூடுல்ஸ் வேகவைக்கும்போது அவை ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க நீரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு வேக வைக்க வேண்டும்.
* பொரியலுக்கு தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள் புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்துப் பொடித்து பொரியலில் சேர்த்தால் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும். விரைவில் கெட்டுப் போகாது.- எச். சீதாலட்சுமி, கேரளா.
* பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம், உரித்த பூண்டு பல் மூன்று, ஒரு தேக்கரண்டி சோம்பு ஆகியவற்றை நைசாக அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜி பொரித்தால் சுவையாக இருக்கும்.
* கீரை மசியலை இறக்கிய பின் பெருங்காயத்தூள் போட்டால் வாசனை அதிகமாக இருக்கும்.
* கத்தரிக்காய் கூட்டு செய்யும்போது கொஞ்சம் கடலை மாவை தூவினால் கூட்டு சுவையாக இருக்கும்.
* தேங்காய் சாதத்தில் சிறிது வேர்க் கடலை, முந்திரி இரண்டையும் சிறிது சிறிதாக உடைத்து சேர்த்தால், சுவையாக இருக்கும்.
* அரைத்துவிட்ட சாம்பார் வைக்கும்போது, அரைக்க வேண்டிய பொருள்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து சேர்த்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
* கலந்த சாதம் கிளறுவதற்கு சாதத்தை ஆற வைக்கும்போது அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி லேசாக கிளறி ஆற வைத்தால் சாதம் உதிர் உதிராக இருக்கும்.– பி.பரத்
* முட்டையை வேக வைக்கும்போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால் முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது
* பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின் காய்ச்சினால், பால் பாத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
* பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
* தோல் உரித்த உருளைக்கிழங்கை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரைத் தெளித்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.
* எண்ணெய்க் கரையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
* காளான்களை அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக் கூடாது. ஏனெனில், அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.– பொ.பாலாஜிகணேஷ்