* அடை செய்யும்போது கையில் தட்டி வட்டமாக்கிய பிறகு, வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் அழகாக இருக்கும்.
* சர்க்கரைப் பாகு தயாரிக்கும்போது அது உருண்டை உருண்டையாக ஆகாமல் இருக்க, சிறிதளவு எலுமிச்சம் சாறை சேர்க்கவும்.
* ஆவக்காய் ஊறுகாய் நல்ல நிறமாக வருவதற்கு நீளமாய் உள்ள வற்றல் மிளகாய் தூளைப் பயன்படுத்தவும்.
* வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சைசாறு சேர்க்கவும்.– எல்.மோகனசுந்தரி.
* உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகியவற்றை விரைவில் வேகவைக்க, அரிசி கழுவிய நீரில் போட்டுக் கொதிக்க வைத்தால் போதும். விரைவில் வெந்துவிடும்.
* காலிஃப்ளவரை, சமைக்கும்போது சிறிது பால் சேர்த்துக்கொண்டால் அதன் பச்சை வாசனை தெரியாது.
* பழைய காலிஃப்ளவர், முள்ளங்கி, முட்டைக்கோஸ் போன்றவற்றைச் சமைக்கும்போது கெட்டவாடை வரும். இதைத் தவிர்க்க, இவற்றைச் சமைக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, சர்க்கரை தூவலாம். சுவையாகவும், மணமாகவும், வாடையில்லாமலும் இருக்கும்.
* ஆரஞ்சுப் பழத்தோலை பொடியாக்கி அதை ரசத்துடன் சேர்த்தால் மணமும் சுவையும் கூடும்.
* மீன் வறுக்கும்போது மசாலாவுடன் சிறிது கடலை மாவும் சேர்த்துப் பிசறி வறுத்தால் மீன் டேஸ்ட்டாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
* நல்லெண்ணெய் வாங்கியவுடன் அதில் ஒரு சிறு துண்டு வெல்லத்தைப் போட்டு வைத்தால் எண்ணெய் கெடாது. மணமுடன் இருக்கும்.– அமுதா அசோக்ராஜா.
* வதங்கிப் போன காய்கறிகளின் மேல் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்துவிட்டால், காய் கறிகள் வதங்கிய தன்மை மாறி புதியது போல் இருக்கும்.
* வாழைத்தண்டு கூட்டுப் பொரியல் செய்யும்போது அத்துடன் சிறிது முருங்கைக் கீரையையும் சேர்த்துச் செய்தால் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
* தோசைமாவு, பொங்கல் போன்றவற்றில் சீரகத்தைக் கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையும், மணமும் அருமையாக இருக்கும்.
* தக்காளிக் குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தைப் பச்சையாக அரைத்து ஊற்றவும். குருமா வாசனையுடன் சுவையாக இருக்கும்.
* கிரேவி வகையறாக்கள் செய்யும்போது கைப்பிடி வேர்க்கடலை எடுத்து தோல் நீக்கி அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்துச் சேர்த்தால் கிரேவி சூப்பர் சுவையோடு அபாரமாய் இருக்கும்.– ஜி.இனியா.
* மோர்க்குழம்பு தயாரித்து அடுப்பிலிருந்து இறக்கும்போது உப்பு சேர்த்தால் போதுமானது. முன்னதாகவே உப்பைச் சேர்த்தால், மோர்க்குழம்பு நீர்த்துப் போய்விடும். சுவையாகவும் இருக்காது.
* பொரித்தெடுத்த ஜாமூன்களைச் சூடான சர்க்கரைப் பாகில் சேர்க்காமல், நன்கு ஆறிய பிறகு சேருங்கள். ஜாமூன்கள் விரியாமல், கரையாமல் சுவையாக இருக்கும்.
* பருப்பு வகைகள் வேகும்போது வெள்ளையாக நுரைத்து வருவதை ஒரு கரண்டியால் எடுத்துவிட்டால், பருப்பு வாசனையாக இருக்கும்.
* கம்பு அல்லது சோளம் ரொட்டி அதாவது பரோட்டா செய்ய ஆட்டாவில் சிறிது மோர் சேர்த்து பிசைந்தால், ரொட்டி அல்லது பரோட்டா மிகவும் ருசியாக இருக்கும்.– எம்.நிர்மலா.
* உளுந்துவடை செய்யும்போது ஒரு கைப்பிடி கொத்துமல்லித் தழையை சேர்த்து ஆட்டி செய்தால் வடை வாசனையாகவும், டேஸ்டாகவும் இருக்கும்.
* சாம்பார் செய்யும்போது அதனுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துச் செய்தால் சாம்பாரின் சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.
* வாணலியில் ஒரு பிடி முருங்கைக் கீரையை நெய்விட்டு வதக்கி, சிறிது தேங்காய் சேர்த்து அரைத்துக் கொதிக்கும் சாம்பாரில் விட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
* முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் இவற்றை வேக வைக்கும்போது ஒரு சொட்டு எலுமிச்சைச்சாறுவிட்டு வேகவைத்தால் வேண்டாத வாடையெல்லாம் போய்விடும்.
* ஓமப் பொடி செய்யும்போது கடலைமாவு மூன்று மடங்கு, அரிசிமாவு ஒரு மடங்கு, சிறிது மைதாமாவு கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமல், தூள் அதிகமின்றி நன்றாக எடுக்க வரும்.
* பொரியல், கூட்டு இவற்றில் போட தேங்காய் இல்லாவிட்டால் புழுங்கல் அரிசியைப் பொரித்து பொடிசெய்து அதில் தூவி இறக்கினால் தேங்காய் சேர்த்துச் செய்தது போலவே இருக்கும்.
* உப்பு ஜாடியில் பிளாஸ்டிக் பேப்பரைச் சுற்றி அதன் உள்ளே உப்புக்கல்லைக் கொட்டினால், உப்புக்கல் கரையாமல் இருக்கும்.
* குலோப்ஜாமூன் பாகில் ஒரு துளி தேன்விட்டால், பாகு உறையாமலும், கெட்டுப் போகாமலும் அதிக டேஸ்ட்டுடனும் இருக்கும்.
* பிளாஸ்டிக் பொருட்களை உப்புநீரில் கழுவினால் ஒருவித வாடை வீசுவது நின்றுவிடும். கெட்ட வாடை வீசாது.
* ஐஸ் ட்ரேயின் உட்பகுதிகளில் சமையல் எண்ணெயை லேசாகத் தடவி பிறகு நீரை ஊற்றினால் ஐஸ் கட்டிகளை எடுக்க எளிதாக வரும்.
* வெந்தயத்தை அரிசிக்கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
* தயிர்சாதத்திற்கு கடுகிற்குப் பதில் ஓமம் போட்டு தாளித்தால், நன்றாக ஜீரணம் ஆகும். சுவையும் மணமும் கூடும்.- எம்.ஏ.நிவேதா.