திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழாவில் 120 கிடாக்களை பலி கொடுத்து, அமர்க்களமான கறி விருந்து 10 ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பெருமாள்கோவில்பட்டியில் கரும்பாறை முத்தையாசாமி கோயிலில், மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 120 கருப்புநிற கிடாக்கள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு அசைவ உணவு தயாரிக்கும் பணி விடிய விடிய நடந்தது. இதற்காக 40 மூட்டை அரிசியில் சாதம் சமைத்து கோயிலின் முன்பு மலை போல் குவித்து வைக்கப்பட்டது. நேற்று காலை 7 மணி முதல் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருப்பாறை முத்தையா சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கோயில் முன்பு அனைவரும் தரையில் அமர வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. காலை 9 மணிக்கு துவங்கிய அசைவ அன்னதானம் பகல் 12 மணி வரை நடைபெற்றது. சாதி பேதமின்றி அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.