திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் அப்துல் நாசர் மதானி. மக்கள் ஜனநாயக கட்சித் தலைவராக உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த இவருக்கு பல வருடங்களாக ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அப்துல் நாசர் மதானி தனது சொந்த ஊரான கொல்லம் அருகே உள்ள அன்வார்சேரிக்கு வந்திருந்தார். இதனிடையே அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. இதற்காக கடந்த சில வருடங்களாக மதானிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 20ம் தேதி கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மதானியின் உடல்நிலை நேற்று மோசமானது. இதைத் தொடர்ந்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.