சென்னை, நவ. 4: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் சார்பில் நடந்து வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவு பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பேரவையில் அறிவித்தார். இதையொட்டி சிறப்பு செய்யும் விதமாக, வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவகத்தில் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டேன். இந்த பணிகளை குறித்த காலத்தில் விரைந்தும், தரமாகவும் கட்டி முடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.