திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் 2 மணி நேரத்தில் 21செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கேரளாவின் தெற்கு பகுதியான திருவனந்தபுரம், பத்தினம்திட்டா ஆகிய இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பத்தினம்திட்டா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சுமார் 2 மணி நேரத்தில் 21செ.மீ. மழை அதிகளவில் பெய்து வருகிறது.
இதன் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். வழக்கமாக மண்டல பூஜை தொடங்கியதில் இருந்து 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதில் தினந்தோறும் 30,000 முதல் 50,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இன்று காலை 11,000 பக்தர்கள் மட்டும் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், சபரிமலை செல்லும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.