புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லி அரசின் போக்குவரத்து, உள்துறை மற்றும் சட்ட அமைச்சரான நஜாப்கர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைலாஷ் கெலாட் (49) நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். மதுபான கொள்கையை உருவாக்கும் அமைச்சர்கள் குழுவில், சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுடன் கைலாஷ் கெலாட்டும் இடம் பெற்றிருந்தார். இதனால், அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் கெலாட் பெயரையும் சேர்த்திருந்தது. அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், நேற்று அமைச்சர் கெலாட்டிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது.