ஆறுமுகநேரி : காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலை மற்றும் பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், நேற்று அதிகாலை 3 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரை பகுதியை மறைவான இடத்தில் இருந்து கண்காணித்தனர்.
அப்போது கரையில் இருந்து கடலில் நின்று கொண்டிருந்த தலா 20 குதிரைத்திறன் கொண்ட 2 மோட்டார்கள் பொருத்திய பைபர் படகில் மூட்டை, மூட்டையாக பீடி இலைகளை 4 பேர் ஏற்றியதை கவனித்தனர். உடனே விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது 3 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.
விசாரணையில் அவர், தூத்துக்குடி திரேஸ்புரம், சிலுவையார் கோயிலை சேர்ந்த அந்தோணிதுரை (52) என்பது தெரியவந்தது. அவர் தன்னை தூத்துக்குடியில் இருந்து 3 பேர் அழைத்து வந்ததாகவும், ரூ.5 ஆயிரம் தந்ததாகவும், இந்த பண்டலில் என்ன பொருள் உள்ளது? என்பது தனக்கு தெரியாது என்றும் கியூ பிரிவு போலீசில் தெரிவித்தார். போலீசார் நடத்திய சோதனையில், பண்டலில் தலா 30 கிலோ எடை கொண்ட 80 பீடி இலை மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தண்ணீரில் நனையாதவாறு அவைகள் ‘பேக்’ செய்யப்பட்டு இருந்தன. மொத்தம் 2.40 டன் எடை கொண்ட இந்த மூட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் பைபர் படகும் கைப்பற்றப்பட்டது. பைபர் படகு மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் பீடி இலைகளும், பைபர் படகும் தூத்துக்குடி சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. காயல்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு 2.40 டன் பீடி இலைகள் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.