திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஏழிமலையில் கடற்படை வீரர்கள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நாடு முழுவதும் உள்ள கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு வாலிபர் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல முயற்சித்தார். உடனே பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் முகம்மது முர்த்தாசா என்றும், காஷ்மீர் பாராமுல்லா பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
மும்பையில் ஒரு கல்லூரியில் படித்து வருவதாக கூறினார். இது குறித்து பையனூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன்பின் அவர் பையனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.