ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதலில் தீவிரவாத தடுப்பு பணியில் ஈடுபட்ட 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டம் வழியாக ராணுவ வாகனத்தில் பாதுகாப்பு படையினர் சென்றபோது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இருபுறமும் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
அந்த வகையில் ரைசோரியின் கேஸ்வி மலைப்பகுதியில் உள்ள குகையில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்ததும் உஷாரான பயங்கரவாதிகள் வெடிபொருட்களை வெடிக்க செய்து தப்பிக்க முயன்றனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் தரப்பிலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.