திருவள்ளூர்: திருவள்ளூர் பூங்கா நகர் தென்றல் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி பானுமதி (57). கடந்த மாதம் 26ம் தேதி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பானுமதி தனது வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தார். அப்போது தீபத்தில் இருந்த நெருப்பு பானுமதியின் புடவையில் பற்றியுள்ளது. புடவையில் மளமளவென தீ பரவியதையடுத்து பானுமதி அதிர்ச்சியில் அலறினார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பானுமதிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பானுமதியை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த பானுமதியை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த பானுமதி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.