பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டார கிராம பகுதிகளில், திருக்கார்த்திகை நெருங்குவதையொட்டி அகல் விளக்கு தயாரித்து, உலர வைக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களாக ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், பில்சின்னாம்பாளையம், கோட்டூர், ஒடையக்குளம், அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலகுறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடந்து வருகிறது.
சமையலுக்கு தேவையான பானை மட்டுமின்றி, சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை, கார்த்திகையையொட்டி அகல் விளக்கு என முக்கிய விஷேங்களில் மண்பாட்ட தொழில் பரபரப்பாக இருக்கும். இந்தாண்டில், வரும் 26ம் தேதி திருக்கார்த்திகை தீபம் என்பதால், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே மண்பாண்ட தொழிலாளர்கள் பலரும், அகல் விளக்கு தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டனர். தற்போது இப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தீபம் ஏற்றி வழிபட களிமண்ணால் செய்யப்படும் விளக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் பலர், விற்பனை செய்ய வாங்குவதற்காக ஆர்டர் கொடுத்துள்ளனர்.
இதனால், சிறியது முதல் பெரிய அளவிலான அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அகல் விளக்கு தயாரிப்பு இருந்தாலும், அவ்வப்போது மழைக்காரணமாக, அதனை உலர வைக்கும் பணி மந்தமாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் மட்டுமே விரைவில் உலர வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், களி மண்ணால் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு அதிகளவு அனுப்பி வைக்கும் முயற்சியில் மண்பாண்ட தொழிலாளர்கள் பலரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.