புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில், வரும் 18ம் தேதி நடக்கிறது. கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்த வினாடிக்கு 5000 கன அடி நீர் திறந்து விடக்கோரி, கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. ஆனால் தங்களது அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இதற்கிடையே கர்நாடக அரசு சார்பில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டமும், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.சிவகுமார், நேற்று டெல்லியில் ஒன்றிய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க, எங்களது அரசை நிர்பந்திக்க கூடாது என்று ஒன்றிய அமைச்சரிடம் கர்நாடக அமைச்சர் டி.சிவக்குமார் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில், வரும் 18ம் தேதி நடக்கிறது. அக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள், காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்புடைய மாநில அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே வரும் 21ம் தேதி காவிரி நதிநீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் வரும் 18ம் தேதி நடப்பது குறிப்பிடத்தக்கது.