Saturday, July 27, 2024
Home » கர்நாடகாவின் விஜயபுரா பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுமார் 18 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு!

கர்நாடகாவின் விஜயபுரா பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுமார் 18 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு!

by Suresh

பெங்களூரு: கர்நாடகாவின் விஜயபுரா பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சாத்விக், சுமார் 18 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. 18 அடி ஆழத்தில் தலைகீழாக குழந்தை சிக்கியிருந்த நிலையில், பக்கவாட்டில் குழி தோண்டி, கீழிருந்து மேலே சென்று குழந்தையை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் சதீஷ் முஜகொண்டா – பூஜா தம்பதிக்கு 2 வயது குழந்தை உள்ளது. இவர்களுக்கு 4 ஏக்கரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பயிரிடுவதற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார். 30அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால்அவர் அதை மூடாமல் இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை 6 மணி அளவில் சதீஷ் முஜகொண்டாவின் 2 வயது குழந்தை சாத்விக் 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

இதனை கண்ட பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கினர். மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

சுமார் 30 அடி ஆழத்தில் குழந்தை சிக்கிய நிலையில் 5 அடிக்கு மேல் பாறைகள் இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. ஜே.சி.பி மூலம் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் அசைவுகளை மீட்பு குழுவினர் உறுதி செய்தனர்.

இந்நிலையில் தற்போது சுமார் 18 மணி நேரத்திற்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சாத்விக் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து குழந்தை சாத்விக் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 18 மணி போராட்டத்திற்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டதையடுத்து குழந்தையின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi