கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் மலையோர பகுதிகள், குலசேகரத்தையொட்டிய பகுதிகள், கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் எதிரொலியாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கடந்த சில நாட்களாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒன்றிரண்டு நாள் மட்டும் தடை விலக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் கடந்த 19ம் தேதி முதல் அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மழைவெள்ளம் குறையாததால் 7வது நாளாக இன்றும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கமுடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.