காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கூட்டு தணிக்கை மேற்கொண்டு, அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு, ரூ.59 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம், சென்னை தெற்கு சரக இணை ஆணையர் முத்து ஆகியோரின் உத்தரவின்படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டர் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், கிருஷ்ணன் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோர் காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே கூட்டு தணிக்கை செய்து அவ்வழியே அதிவேகமாக செல்லும் வாகனங்களை ரேடார் கருவி மூலம் கண்டறிந்து, 31 வாகனங்களுக்கு, ரூ.59 ஆயிரம் அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், ‘அதிவேகமே சாலை விபத்தில் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. சாலைகளில் பக்கவாட்டில் வட்டமாக பொருத்தப்பட்டிருக்கும் போக்குவரத்து கருவியில் குறிப்பிடப்பட்ட வேக அளவில்தான் அந்தந்த பகுதியில் செல்லவேண்டும் என்றும் விளக்கமளித்தார். மேலும், தணிக்கையின்போது பெரும்பாலான ஓட்டுனர்கள் தாங்கள் சரியான வேகத்தில் தான் வந்தோம் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் ரேடாரின் வேக புகைப்படத்தை பார்த்த பின்தான் தம் தவறை உணர்ந்து, இனி இவ்வாறு செய்யமாட்டோம் என்று உறுதியெடுத்து செல்கின்றனர்.