Thursday, May 2, 2024
Home » நடவாவி கிணற்றில் எழுந்தருளிய காஞ்சி வரதராஜ பெருமாள்

நடவாவி கிணற்றில் எழுந்தருளிய காஞ்சி வரதராஜ பெருமாள்

by Suresh

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் எத்தனை திருவிழாக்கள் நடைபெற்றாலும், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சி வரதராஜ பெருமாள் காஞ்சிபுரத்தை அடுத்த அய்யங்கார்குளத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரம்பரிய நடவாவி உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி, பாலாற்றங்கரை அருகே உள்ள அய்யங்கார் குளம் கிராமத்தில் பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து உற்சவம் கண்டருள்வது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து கிளம்பி ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கல், தூசி, கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டு அருளியபடி அய்யங்கார் குளம் சஞ்சீவிராயர் கோயிலுக்கு எழுந்தருளினார். அங்கு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று பச்சை, அரக்குகரை, வெண்பட்டு உடுத்தி திருவாபரணங்கள், பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து ஊர்வலமாக கொண்டு வந்து பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறக்கி மண்டபத்தில் வைத்து, தீபாராதனை செய்து நைவேத்தியம் படைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடவாவி கிணற்றில் உள்ள 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து, வரதராஜ பெருமாள் மேலேறி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு நடவாவி கிணற்றில் இருந்து புறப்பட்டு செவிலிமேடு பாலாற்றில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். அங்கு நள்ளிரவில் வரதருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பிரம்ம ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு அதிகாலை அங்கிருந்து புறப்படும் வரதர் விளக்கொளி பெருமாள் கோயிலுக்கு சென்று, அங்கிருந்து கோயிலை சென்றடைவார்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi