விழுப்புரம்: தனியார் பள்ளி விடுதியில் இறந்த மாணவியின் தாயிடம் 1,150 பக்க குற்றப்பத்திரிகை நகலை விழுப்புரம் கோர்ட் வழங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா ஆகிய 5 பேர் மீது 1,150 பக்க குற்றப்பத்திரிக்கையை கடந்த 15ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். ஆனால் குற்றப்பத்திரிகையில் ஆசிரியைகள் பெயர் நீக்கப்பட்டதாக தெரிகிறது, எனவே தனக்கு அதன் நகல் வழங்கவேண்டும் என்று ஸ்ரீமதியின் தாய் செல்வி நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்று நீதிபதி புஷ்பராணி, குற்றப்பத்திரிகை நகல் வழங்க உத்தரவிட்டார். அதன்படி மாலையில் செல்வியிடம் 1,150 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.