Sunday, May 5, 2024
Home » கள்ளக்குறிச்சியில் பரபரப்பு; ரூ.1 கோடி சொத்தை அபகரிக்க மகள், 2 பேரனை கொன்றோம்: வளர்ப்பு தாய் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு; ரூ.1 கோடி சொத்தை அபகரிக்க மகள், 2 பேரனை கொன்றோம்: வளர்ப்பு தாய் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்

by Suresh

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மகள், 2 பேரன்களை கொன்ற வளர்ப்பு தாய் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.1 கோடி சொத்தை அபகரிக்க கொலை செய்ததாக கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆழடிபாலயகொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி (35). இவரது கணவர் மணிகண்டன். இவர்கள் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நரிமேடு பகுதியில் வீடு கட்டி வசித்து வந்தனர். இவர்களுக்கு தமிழரசன் (11), 8 மாத கைக்குழந்தை கேசவன் என 2 மகன்கள் இருந்தனர். கடந்தாண்டு வாகன விபத்தில் மணிகண்டன் உயிரிழந்தார்.

அதற்கு பிறகு மினி டெம்போ மூலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் வளர்மதி. இந்நிலையில், கடந்த 19ம் தேதி வளர்மதி, தமிழரசன், கேசவன் ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அழுகிய நிலையில் கிடந்த 3 சடலங்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி மோகன்ராஜ் உத்தரவின்பேரில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் முந்திரி விற்பனை செய்து வந்த வளர்மதியின் வளர்ப்பு தாயான அஞ்சலை (எ) விமலா(50) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அஞ்சலையை கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் வலுத்தது. தீவிர விசாரணையில் வளர்மதியை கொலை செய்ததை அஞ்சலை ஒப்புகொண்டார். அவர் கூறிய தகவலின்பேரில் அவரது உறவினர்களான ரிஷிவந்தியம் அடுத்த பாசறை கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (27), அவரது அண்ணன் பூபாலன் (30), அதே ஊரை சேர்ந்த சிவா (39), நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியை சேர்ந்த ராமு (24) ஆகிய 4 பேரை போலீசார் அழைத்து விசாரித்தனர். அவர்கள், கொலை செய்ததை ஒப்புகொண்டனர். போலீசில் அஞ்சலை அளித்த பரபரப்பு வாக்குமூலம்:

வளர்மதி என்னிடம் ரூ.22 லட்சம் கடன் வாங்கி உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் 3 சென்ட் இடத்தில் மாடி வீடு கட்டினார். பணத்தை திருப்பி கொடுக்கும் வரை அந்த வீட்டில் என்னை குடியிருக்குமாறு கூறினார். அதன்படி நானும் வசித்து வந்தேன். பின்னர் எனக்கு பணம் தேவைப்பட்டதால், ரூ.22 லட்சத்தை திருப்பி கேட்டேன். கொடுக்கவில்லை. இதனால் வீட்டை என்னிடம் கொடுத்துவிடு என கேட்டதற்கு, ‘இங்கு ஒரு சென்ட் ரூ.15 லட்சத்திற்கு மேல் விற்பனை ஆவதாக கூறி என்னிடம் ரூ.60 லட்சத்திற்கு மேல் வேண்டும்’ என்றார். குறைந்த விலையில் தான் வாங்குவேன் என்று கூறினேன்.

வளர்மதி ஏற்காததால், எனது பெயருக்கு வீட்டை எழுதி கொடு என கேட்டேன். மறுத்து விட்டார். அதனால் அவரை கொலை செய்துவிட்டால் செங்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் உள்ள ரூ.1 கோடி மதிப்பிலான மொத்த சொத்துகளையும் அபகரித்து விடலாம் என நினைத்தேன். அதன்படி கடந்த 2 மாதத்திற்கு முன்பு திட்டம் வகுத்தேன். இதற்காக ரூ.1.50 லட்சம் கூலி கொடுப்பதாக பாசார் கிராமத்தை சேர்ந்த எனது உறவினர் தமிழ்செல்வனிடம் பேசினேன். அவரும் சம்மதித்தார். அதன்படி தமிழ்செல்வன், உறவினர் ராமு ஆகியோருடன் சில நாட்களுக்கு முன் வளர்மதியை சந்தித்து பணம் கேட்டு மிரட்டினோம். எங்கள் நடவடிக்கையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரது தங்கை வனிதாவிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதனால் அங்கிருந்து புறப்பட்டு விட்டோம்.

பின்னர் மீண்டும் கடந்த 17ம்தேதி இரவு சுமார் 9 மணியளவில் வளர்மதி வீட்டிற்கு தமிழ்செல்வன், ராமு, பூபாலன், சிவா ஆகியோருடன் 1 பைக்கில் சென்றோம். பின்னர் நான் (அஞ்சலை) தமிழ்செல்வன், ராமு ஆகியோர் வளர்மதியின் வீட்டிற்குள் சென்றோம். பூபாலன், சிவா ஆகியோர் வெளியே நின்றிருந்தனர். அந்த நேரத்தில், தமிழ்செல்வன், ராமு ஆகியோர் வளர்மதியின் வயிற்றில் கத்தியால் குத்தினர். சத்தம் போட்டதால் வாயை மூடி கழுத்தை அறுத்தனர். மேலும் தூங்கி கொண்டிருந்த தமிழரசனையும், 8 மாத கைகுழந்தையையும் கழுத்தில் குத்தி கொலை செய்தோம். பின்னர் போலீசாருக்கு தடயங்கள் ஏதும் கிடைக்க கூடாது என்பதற்காக மிளகாய் பொடி தூவி விட்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டோம். இவ்வாறு அஞ்சலை கூறினார்.

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi