சென்னை: கடந்த 2006-2011ம் விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது அதிமுக ஆட்சி காலமான 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம் சிகாமணி உட்பட ஆறு பேருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கவுதம் சிகாமணி உட்பட 6 பேரும் நேரில் அஜராகி இருந்தனர்.
அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, குற்றப்பத்திரிகை ஆவணங்களில் சில பக்கங்களில் உள்ள விவரங்கள் தெளிவில்லாமல் உள்ளது என்று தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இதற்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.