சென்னை: கடந்த 31ம் தேதி கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி, தனது 3 தோழிகளுடன் சேர்ந்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரில், கலாஷேத்ராவில் தாங்கள் படிக்கும் காலத்தில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் செல்போன் வாயிலாக ஆபாச சைகைளால் அறைக்கு வரவழைத்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என மாணவிகள் குறிப்பிட்டிருந்தனர்.
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர், நேரில் ஆஜராக வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில் 3 பிரிவுகளில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இப்புகாரின்பேரில் அடையாறு மகளிர் காவல்நிலைய போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பெண்ணின் மாண்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் ஹரிபத்மனை விசாரணைக்காக தேடி வந்தனர்
இந்நிலையில் மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் இன்று கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆஜராகியுள்ளார். சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் குமாரி முன்பு கலாஷேத்ரா இயக்குநர் ஆஜரானார். கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தி வருகிறார். கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேராசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் செல்போனை சைபர் ஆய்வகத்துக்கு அனுப்ப போலீசார் திட்டம் வகுத்துள்ளனர். எத்தனை மாணவிகளுக்கு ஹரி பத்மன் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். எத்தனை மாணவிகளுடன் செல்போனில் ஹரி பத்மன் பேசியுள்ளார் என ஆய்வு செய்ய போலீசார் தீவிரமாகியுள்ளனர். செல்போனில் ஏதேனும் அழிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய சைபர் ஆய்வகத்துக்கு அனுப்ப போலீசார் திட்டம் தீட்டியுள்ளனர்.