களக்காடு: களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தாமரை குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதையடுத்து விவசாயிகள் விவசாயப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.களக்காட்டின் மையப் பகுதியில் தாமரை குளம் உள்ளது. களக்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 400 ஏக்கர் பாசன நிலங்கள் இந்த குளத்துப் பாசனத்தின் மூலமாக பயனடைகின்றன. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாமரை குளம் நிரம்பி, மறுகால் வழியாக தண்ணீர் பாய்ந்து செல்கிறது. வாழை மற்றும் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளின் தேவைக்காக குளத்திலுள்ள 3 மடைகள் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வாழை நெல், மகசூலில் ஈடுபட்டுள்ள தாமரைகுளத்துப் பாசன விவசாயிகள் விவசாயப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். அருவி போல் கொட்டும் மறுகாலில் சிறுவர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.