சென்னை: கலைஞரின் நூற்றாண்டு விழா நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து மாலையில் வடசென்னையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவது வழக்கம்.
இது கலைஞரின் நூற்றாண்டு விழா என்பதால், ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்வும் திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் அளப்பரிய சாதனைகளை மக்களின் நெஞ்சில் பதிய செய்யும் வகையிலும் அமைந்திட வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலைஞரின் பிறந்தநாளில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை ெசலுத்துகிறார்.
மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு அவர் மரியாதை செலுத்த உள்ளார். அதே போல சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாலை 5 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து ஜூன் 20ம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். இந்த விழா, முழுநாள் நிகழ்வாகக் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற உள்ளது.
கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை திமுக கிளை கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படத்தினை வைத்து, கட்சியினர் அனைவரும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்திட, மாவட்ட,மாநகர,ஒன்றிய,நகர, பகுதி,பேரூர், வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி, “ஊர்கள் தோறும் திமுக” எனும் தலைப்பில், கிளைக் கழகங்களில் அமைந்துள்ள திமுக பழைய கொடிக் கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்டங்கள் தோறும் அரசின் விதிகள் மற்றும் அனுமதியை பெற்று, “எங்கெங்கும் கலைஞர்” என்ற அடிப்படையில், கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் திமுக மூத்த முன்னோடிகளுக்குப் “கழகமே குடும்பம்” எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.…
— M.K.Stalin (@mkstalin) June 1, 2023
சீமான், திருமுருகன் காந்தி டிவிட்டர் முடக்கத்துக்கு கண்டனம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரது டிவிட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டிவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. டிவிட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.